Monday, 31 May 2004

[1] காலம் கரைகின்றது. நீ இன்னமும் மணம் பரப்புகிறாய். வண்ணக் குழையலென காட்சிப் புலன்கள். வானவில்லின் நிறம் பிரிக்கும் அணுத்துணிக்கைகள். நண்பா, உந்தன் நிறம் எது? சுடர்கின்றாய்..
மரவள்ளித் தோட்டத்தில் நீ வீழ்ந்து கிடந்தாய். செம்மண் பாத்திக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்தது. தோட்ட வெளிக்கு எல்லையிட்டிருக்கும் பனைகளின் பின்னே ஊரின் புறத்திருந்து விழிகள் உன்னை மொய்த்திருந்தன. துப்பாக்கிகளின் முற்றுகை உடைத்து மதியச் சு10ரியன் உன்னைத் தொடுகிறான். சயனைட் குப்பிக்கு உன்னை ஒப்படைத்துவிட்டு சிரிக்கிறாய். மிளகாய் புகையிலை வாழையில் எல்லாம் உந்தன் சிரிப்பலை படிகின்றது.
முதல் வித்து நீ. முன்னறிவித்தவன் நீ.
சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தாய். கால வெளியில் சுவடுகள் பதித்தாய். காலக் கரைவிலும் உந்தன் சுவடுகள்.
[2] நண்பா, இப்படியும் காலம் வந்தது. கறையான் புற்றில் கருநாகங்கள். அசோகச் சக்கர நாற்காலி அமர்ந்து தேச பரிபாலனம். மரவள்ளிச் செடிகளும் கண்ணீர் உகுத்தன. அமிலச் கரைசலில் உந்தன் சுவடுகள் எரித்தனர். முள்முடிகளை மக்கள் தலைகளில் அறைந்தனர். துளிர்களைக் கிள்ளியும் மலர்களைப் பிய்த்தும் இரத்த நெடியினைத் துய்த்து நுகர்ந்தனர்.
நண்பா, நீ என்ன சொன்னாய். கருவிகள் கையெடு களைகளை அகற்று அப்படித்தானே! இவர்களோ, வயல்களுக்குத் தீ வைத்து வரப்பினில் தானிய மணிகள் பொறுக்கினர். இந்தக்காலம் அந்தகாரமானது. பேய்களும் பேய்க்கணங்களும் பூதங்களும் என நர்த்தனம் புரிந்தது.
ஆயினும், உனது சிரிப்பின் அலைகள் ஆழ்ந்து விரிந்து எங்கெங்கும் பரவி வெட்ட வெட்டத் தழைத்தது.
நண்பா, உந்தன் இளவயதில் உயிரை வெறுக்கவும் சயனைட் குப்பியை உயிரெனக் கொள்ளவும் செய் அல்லது செத்துமடியென பிரகடனம் செய்யவும் எவை உன்னை உந்தியதோ இன்னமும் அவை அப்படியே உள்ளன. உந்தன் ஒளிரும் சுவடுகளும் எம்மெதிரே விரிகின்றன.
*1989-06-05 (சிவகுமாரனின் 15வது ஆண்டு நினைவு நாளின் போது எழுதப்பட்டது.) |