Sunday, 08 May 2005
படைப்பு இலக்கியத்திற்கும் அதிகார மையங்களான அரசியல், மத,சமூக நிறுவனங்களுக்கும் இடையேயுள்ள உறவுகள் என்றுமே ஒரே சீராக இருந்ததில்லை. சில வேளைகளில் அது சிக்ககல் மிகுந்த உறவாகவே அமைந்துவிடுகின்றது. இவ்வதிகார மையங்களின் விருப்புகள் எதிர்பார்ப்புகள் கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு படைப்பு அமைந்துவிடுகையில் அப்படைப்பும் அப்படைப்பாளியும் கொள்ளும் நெருக்கடிகள் வாழ்விற்கும் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடுவனவாகவும் அமைந்து விடுகின்றது. இவ்வதிகார மையங்கள் தமது விருப்புக்கு மாறான படைப்புகள் வெளிவருவதையும் அவை மக்கள் மத்தியில் பரவுவதையும் விரும்புவதுமில்லையாகையால் அவற்றைத் தடைசெய்யவும் அப்படைப்பின் படைப்பாளியை நாட்டைவிட்டு வெளியேற்றும் நிலையையும் ஏற்படுத்திவிடுகின்றது. இது உலக அளவில் தொடரும் ஒரு துன்பியலாய் இலக்கியக்களத்தில் நீடிக்கிறது. ஆழுமை கொண்ட படைப்பாளிகள் மற்றவர்களின் தேவைக்காக எதையுமே படைப்பதில்லை. சமூக அனுபவங்களின் உள்ளவாங்கல்களாக அவர்கள் படைப்புகள் வெளிவரும்போது அச்சமூக யதார்த்தத்தையும் சமூக விமர்சனங்களையும்தான் பல அதிகார மையங்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போவதுண்டு.
இரசியப் படைப்பாளியான BORIS PASTERNAK , செக் நாட்டின் MILAN KUNDERA, ஆசிய-ஆங்கிரேயரான SALMAN RUSHDIE, பங்களாதேசின் TASLIMA NASRIN, பிரிட்டன் D.H.LAWRENCE, போன்றவர்கள் மிக நீண்ட பட்டியலில் மிகச்சிலராகும்.
பஸ்டநாக்கின் டொக்ரர் சிவாகோ (Dr.Zhivago) இரசியாவில் நடைபெற்ற புரட்சியையும் அது ஏற்படுத்திய சில விபரீத அரசியல் விளைவுகளைப் பற்றியும் காதல் மனம் கெண்ட இதயங்கள் மாறிவந்த அரசியல் சூழலுள் சிக்கிப் பாந்தாடப்படுவதை விளக்குகிறது.
இந்நாவலின் விபரிப்புகள் அன்றைய கட்சியின் இலக்கிய கோட்பாடான சோசலிச யதார்த்தவாதத்திற்கு பொருந்தி வரவில்லை என்பதனால் அரச அதிகாரிகளாலும் இலக்கியக் கொமிசார்களாலும் பஸ்டநாக் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். ஆவர் பொருட்டு அவரின் நேசத்திற்குரிய ஒல்கா சிறையிலடைக்கப்பட்டாள். ஓரு அதிகாரி அவளிடம் இவ்வாறு கூறினார் 'அவர் (பஸ்டநாக்) மக்கள் முகத்தில் அறைந்துவிட்டார். ஓரு பன்றிகூட அவ்வாறு செய்யாது தான் உண்ட இடத்தில் கழித்துவிட்டார்' என்றும். பிரிட்டிஸ் உளவாளி என குற்றம் சுமத்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டன. மிலான் குண்டரா செக்கோ செலவாக்கியாவின் தொழிலாளியாக இருந்தவர். பின்னர் ஜாஸ் இசைஞரானார். இறுதியாக இலக்கியத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கினார். 1958ல் செக்கோ செலவாக்கியா மீது இரசியா படையெடுத்த செயலை இவரால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதற்கு எதிராக தனது எழுத்துக்களை முன்வைத்தார். ஆப்போதைய இரசியச்சார்பு அரசு இவரது பதவியை பறித்துக்கொண்டது. இவரது படைப்புகள் நாட்டிலுள்ள அத்தனை நூல் நிலையங்களிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டன. நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பிரான்சில் குடியேறினார். இவரது THE BOOK OF LAUGHTER AND FORGETTING நாவல் வெளிவந்ததனால் செக் அரசு இவரது குடியுரிமையை இரத்துச் செய்தது.
தஸ்லிமா நஸ்ரினின் மிகுந்த சர்ச்சைக்குள்ளான நாவல் LAJJA அயோத்தியில் இந்துத் தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டதன் எதிர்விளைவாக பங்களாதேசில் வாழும் இந்துக்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதையும் இவற்றிற்கு எதிராக எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காத அரசின் நிலைப்பாட்டில் மனம் கசந்த இந்துக் குடும்பங்கள் பங்களாதேசை தமது தாயகம் எனக் கருதமுடியாத நிலையில் இந்தியாவை நோக்கிப் புலம் பெயர வைக்கிறது. ஓரு டொக்டராக இந்ததனால் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய நேரடி வாக்குமூலங்களிலிருந்து உருவானது இந்த நாவல். மற்றையோருக்குத் தீங்கு விளைவிக்கும் இந்த அடிப்படைவாதத்திற்கு எதிராக மத உணர்வுகளைத் தாண்டி ஒன்று திரள வேண்டுமெனவும் வேண்டினார். ஆனால் விளைவு அவர் மிகவும் கேவலமாக நிந்திக்கப்பட்டார். அவருக்கு எதிராக மத அடிப்படைவாதம் திரண்டு எழுந்தது. ஆவரது எழுத்துக்கள் அனைத்தும் இஸ்லாம் மதத்திற்கு எதிரானவை எனக் கூறப்பட்டது. டாக்கா வீதிகள் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தஸ்லிமாவை கொல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறியும் தலைமறைவாக வாழவேண்டிய நிலைக்கு ஆளானார்.
சல்மான் ருஷ்ரியின் நிலையும் இத்தகையதே. இவரது THE SATANIC VERSES இஸ்லாமிய மதத்தை அவமதித்தவிட்டதாகச் கூறப்பட்டது. ஊலகம் பூராவிலும் வாழும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினரால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேர்மிங்காம் பகுதியில் இந்நூல் தீ யிட்டு கொளுத்தப்பட்டது. ஈரானிய மதத்தலைவர் அயதுல்லா கொமேனியால் ருஷ்ரியின் தலைக்கு விலை வைக்கப்பட்டது. உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அநேகர் ருஷ்ரியின் படைப்பில்கியச் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார்கள். மதபீடத்தின் மனதை மாற்றமுடியவில்லை. பிரித்தானிய அரசின் இருபத்திநாலு மணிநேரப் பாதுகாப்பில் ருஷ்ரி இருக்க நேரிட்டது. இவரது மனைவி இவரைவிட்டுப் பிரிந்தார். இறுதியில் தனது புதிய காதலியுடன் அமெரிக்காவில் வாழ்கிறார்.
டி.எச்.லோரன்சின் LADY CHATTERLEY’S LOVE ஆபாசம் என்ற பெயரில் சமூக நிறுவனங்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. உலக எழுத்தாளர்களே இரண்டுபட்டு நின்று அதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டியதாயிற்று. இந்நாவல் பற்றி பிரித்தானிய நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையே நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைகளை தொகுத்து THE TRIAL OF LADY CHATTERLEY எனப் பென்குயின் ஒரு விஷேட பதிப்பையே 1960களில் வெளியிட்டிருந்தது. இந்த விசாரணையின்போது இந்த நாவலுக்கு சாதகமாக வாக்களித்த பன்னிரண்டு ஜுரிமாருக்கு .இந்நாவலின் ஒரு பதிப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டது.. அவர்களாலல்லவா வாசகர்கள் கைகளில் இந் நாவல் கிடைத்தது.
யுத்தத்தில் காயமடைந்ததன் மூலம் முடமாக்கப்பட்ட கிளிபேட் சீமானின் மனைவி தனது தோட்டக்காரனுடன் கொள்ளும் உறவை வெளிப்டையாக விபரிக்கும் நாவல் இது. அவர்களது உறவு வெறும் உடல் மட்டும் சார்ந்ததல்ல அதற்குமப்பால் ஆழமான அன்பு சார்ந்ததும்கூட. இத்தடைமுயற்சிகள் சமூக அக்கறையின் காரணமாக ஏற்படுவது என்ற கூறப்பட்டாலும் இவற்றுள் தனமனித விரோதம், காழ்ப்புணர்ச்சி, விமர்சனத்தை சகித்துக்கொள்ளாத மனநிலை என்பனவும் கலந்தே இருக்கின்றன. தவிரவும் இத்தடைகள் வெற்றியளித்தனவா என்றால் அதுவும் இல்லை. இப்படைப்புகள் தமக்கான வழிகள் மூலம் மக்களின் கைகளில் கிடைத்துக்கொண்டுதான் இருந்தது. டொக்டர் சிவாகோ எல்லாத் தடை முயற்சிகளையும் தாண்டி இத்தாலிய மொழியில் வெளிவந்தாலும் அதே காலப்பகுதியில் தட்டச்சு மூலம் அந்நாவல் ரசிய மொழியில் ரசியாவுக்குள் விநியோகிக்கப்படடுக் கொண்டுதான் இருந்தது. ஏமிலிஜோலாவின் 'நாநா' நாவல் பிரான்சில் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் எல்லா வீடுகளிலும் அந்நாவல் புழக்கத்தில் இருந்தன. குடும்பத்தில் ஒருவர் மற்றவர்களுக்குத் தெரியாமல் தனித்தனிப் புத்தகத்தை வைத்து இரகசியமாக வாசித்துக்ககொண்டிருந்ததாக சொல்லப்படது. ஈரானின் தடைகளையும் மீறி NABOKOV வின் LOLITA வாசிக்கப்பட்ட செய்தியைத்தானே READING LOLITA IN THERAN நமக்கு தெரிவிக்கின்றது. லஜ்யா நாவல் பங்களாதேசத்தை தாண்டி ஆங்கிலம் மூலம் பரவிச் சென்றுள்ளதே. இன்று தொழில் நுட்பங்கள் அதிகரித்த நிலையில் தகவற் தொடர்பு சாதன வசதிகள் அதியுச்ச பயன்பாட்டிலிருக்கையில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் உட்கார்ந்திருக்கையில் இதன் தடை என்பதே அதன் சாராம்சத்தில் அர்த்தமிழந் போய்விடுகின்றது. இது தவிர அதிகாரத்தில் இருக்கும் தனிநபர் மாற்றம், அரசியல் மாற்றம், காலமாற்றம் என்பவைகள் கூட இருந்துவந்த நிலைமையில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவையே..
ஸ்ராலின் கால நிலமையை விளக்குவதற்காக அதுவரை பிரசுர அனுமதி மறுக்கப்பட்டிருந்த SOLZHENITSYN னின் ONE DAY IN THE LIFE OF IVAN DENISOVICH என்ற குறுநாவல் குருசோவின் அரசியல் தேவைகளுக்காக மீள் பிரசுரமாகவில்லையா? 'பாதிகன்னியாஸ்திரி பாதி வேசை' என்று அதிகாரவர்க்கத்தால் கூறப்பட்ட ANNA AKHMATOVA வின் REQUIEM என்ற நெடும்பாடல் பல ஆண்டுகளின் பின்னர் பிரசுரிக்கப்படவில்லையா. 'இரங்கற்பா தொடர் கவிதையை முழவதுமாக வெளியிட்டதன் மூலம் இந்த நூற்றாண்டின் மாபெரும் கவிஞருக்கு நீண்டகாலமாக செய்யப்பட்டுவந்த அநீதியை துடைத்தெறிந்தது. அப்படைப்பு உருவாக்கப்பட்டு ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கும் அப்படைப்பாளி மரணமடைந்து இருபத்தியோராண்டுகளுக்கும் பிறகு அது இரசியாவில் முதல்முறை வெளியிடப்பட்டதானது சோவியத் சமூக வாழ்வில் அறநெறிகள் புதுப்பிக்கப்படுவதன் அறிகுறியாகவே அமைந்துள்ளது.' என பிரபல தமிழக விமர்சகர் எஸ்.வி. இராஐதுரை இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்க எழுத்தாளர் J.M.COETZEE தன் DISCRACE நாவல் மூலம் கறுப்பின மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் இலக்கியத்தற்கான நோபல் பரிசினை அவர் பெற்றபோது அவர் நம்மவர் என்று பெருமை கொண்டாடினார்கள்.
எக்கருத்தும் எல்லாக் காலத்திற்கும் நிலையாக இருப்பதில்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. சில தனிப்பட்டவர்களின் தனிப்பட்ட நோக்கங்கள் காலங்கடந்தவையும் அல்ல. காலத்திற்கு கட்டுப்பட்டவைகளே அவைகள். ஆனால் தடைகளுக்கு உள்ளாகும் படைப்பாளி என்னவோ அக்காலத்துக்குள் நொந்து நூலாகித்தான் போய்விடுகிறான். ஏனவே நூறு பூக்களை மலரவிடுவோம். மக்கள் எவை தமக்கு உகந்தவை எனத் தெரிந்து கொள்வார்கள். காலமும் எவை உயிர்வாழக் கூடியது எனத் தீர்மானித்துக்கொள்ளும். |