அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நேர்காணல் ஒன்றில்:   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்.  
Sunday, 16 October 2005

கி.பி.அரவிந்தன், சுந்தரராமசாமி, மு.புஷ்பராஜன், பத்மநாபஐயர்

(1993ல் திரு.சுந்தரராமசாமி அவர்கள் இலண்டன் வந்திருந்தபோது சந்தித்தமை பற்றி  à®®à¯†à®³à®©à®®à¯ இதழில் எழுதியிருந்தேன். அதுவே  அவருடைய இரங்கல் நினைவாக் இங்கே மறுபிரசுரமாகின்றது. அன்றைய சந்திப்பின்போது சுரா பற்றி எனக்குள் இருந்த கருத்துக்களுக்கும்  à®‡à®©à¯à®±à¯ˆà®•à¯à®•à¯ உள்ள கருத்துக்களுக்கும் இடையே வேறுபாடு உண்டு. ஆனால் à®®à®¤à®¿à®•à¯à®•à®¤à¯à®¤à®•à¯à®• எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்து என்றும் இருக்கவில்லை. à®…ன்றைய சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம்.படத்தில் கி.பி.அரவிந்தன், சுந்தரராமசாமி, மு.புஷ்பராஜன், பத்மநாபஐயர் காணப்படுகின்றனர்.)

கார்ல்மார்க்சின் கல்லறையைத் தேடி இலண்டன் தெருக்களை  அளந்தபடி அலைந்த அந்த அணியுடன் வழியில் நானும்  வளவனும் தொற்றிக்கொண்டோம்.
ஈழத்தின் இலக்கியப் பரப்பில் காத்திரமாய் எழுந்த 'அலை'  இலக்கிய இதழின் இணையாசிரியர் மு.புஷ்பராஜன்,  படிப்பாளியும் எழுத்தாளருமான ஜமுனா ராஜேந்திரன்,  எப்போதும் இலக்கியப்பணியில் முனைப்புடன் செயலாற்றும்  பத்மநாப ஐயர், ஓவியரும் நடிகரும் நிழற்பட கலைஞருமான  கிருஷ்ணராஜா, இலக்கிய ஆர்வலர் நேமிநாதன், எனப்பயணித்த  இலக்கிய அணியில் கண்களை மூடி தாடியை நீவியபடி  மோனத்திலிருந்தார் சிறப்புவிருந்தினரான சுந்தர ராமசாமி.
இலண்டனில் அந்த புகழ்பெற்ற ஹைகேட் (HIGHGATE)   கல்லறையின் வாசலில் நின்றபோது அது மயானமாய்  தோன்றவில்லை. மலர்வனமாய், கலைமிளிரும் தூண்கள்  பீடங்கள் கொண்ட காட்சியகமாய், மெய்யிருள் கவியும்  மெளனத்தை அணைத்தபடி விரியும் காடாய் இருந்தது.
கார்ல் மார்க்சின் மார்பளவு சிலையை  தாங்கிய பீடத்துடனான  அந்த கல்லறையை நெருங்கியதும் நெஞ்சு பிசைந்தது.  மின்னலை பாய்ந்தது. சர்வமும் சிலிர்த்தது. இரு  நூற்றாண்டுகளின் மாமனிதர் அவர்.
19ம் நூற்றாண்டில் உலகியல் வாழ்வில் உழன்றும், 20ம்  நூற்றாண்டின் அரசறிவியல், பொருளியல், தத்துவார்த்த சிந்தனா பரப்பெல்லாம் உயிர்ப்புடன் விரவியும், இன்றைய உலக  மாற்றங்களின் ஊடுபாவாக விளங்கியவரினதும்  கல்லறையல்லவா அது. நாங்கள் சென்ற தருணத்தே  கல்லறையருகே காணப்பட்ட முகங்கள்  தென்கிழக்காசியாவையும், ஆபிரிக்காவையும்  சேர்ந்தவையாகவே இருந்தன. மார்க்சின் சிலைதாங்கிய  பீடத்தினருகே நின்று தன்வரவை பதிவாக்கி கொண்டிருந்த சுரா  வின் முகத்தில் ஒரு திருப்தியும் ஒன்றிப்பும் தெரிந்தது.
மெலிந்த சற்றே உயரமான வயதால் தளராத சுராவின்  ஊடுருவிப் பாச்சும் கண்களின் வீச்சும் அதை மேலும்  கூர்மைப்படுத்தும் கண்ணாடியும், கறுப்பும் வெள்ளையுமாக  மணிப்பிரவாளமென அடர்ந்த தாடியும் நெற்றியின் ஏற்றத்தை  அங்கிகரித்து பின்வாங்கிச் செல்லும் தலைமுடியும்  முகப்பொலிவுமாய் ஒரு தோற்ற ஈர்ப்பு அவரிடத்ததே இருந்தது.
அவரின் தீவிர வாகனாய் நான் இருந்ததில்லை.  வாசித்திருக்கிறேன். அவர் பற்றிய வெளியாரின் பேச்சுக்கள்  கேட்டிருக்கிறேன். சுராவின் சிந்தனா பள்ளி முறைமை ஒன்று  வளர்ந்து வருவதை நான் அறிவேன். ஈழத்திலும் அவரின்  சிந்தனா பள்ளி முறையின் பாதிப்புண்டு என்று கருதுகிறேன்.  அது எனக்கு ஏற்புடையதுதானா என்று எப்போதும் நான்  உரைத்துப்பார்த்ததில்லை. அதற்கான தேவையும் எனக்கு  இருந்ததில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிட்டியதானது  மகிழ்ச்சியாக இருந்தது. பூஞ்சணம்கட்டிக் கிடந்த இலக்கியத்தை தூசுதட்டி நான் துடைததுக் கொண்டிருப்பதும் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.
ஒருவாறு கார்ல்மார்க்சின் கல்லறையை தரிசித்துவிட்டு  திரும்புகையில் தொடஙகியது எங்கள் உரையாடல். நேரம்  மதியம் இரண்டு மணியையும் தாண்டிவிட்டிரு்நதது. உணவுத்  தேடலும் அலைவாயிற்று. ஏனெனில் சுராவுக்கு மரக்கறி  உணவு. சுராவின் கனடா பயண அனுபவங்கள் பற்றியதும்  ஐரோப்பிய தமிழர் வாழ்வுகள் பற்றியதுமான பரிமாறல்கள்  முடிந்த தருணத்தில்தான் 'இலண்டன் நகரம் அதன்  செல்வப்பொலிவு, கலைப்பழமை, சதுக்கங்கள், நினைவுத்  தூபிகள் சிலைகள் என்பவற்றைப் பார்க்கையில் தாங்கள்  எவ்வைகை உணர்வைப் பெறுகின்றீர்கள்?' என்ற கேள்வியை  முன்வைத்தேன். மீளவும் என்னிடம் கேட்டு கேள்வியை  சரிசெய்து கொண்டதும் உரையாடல் துண்டித்து போனது.  எங்களை அறியாமல் கால்கள் நடந்து கொண்டிருந்தன. சிறிது  நேரம் கழித்தே அவர் கூறினார். ' முதலில் சந்தித்துக்கொள்ளும்  காதலர்கள் மனநிலையில்தான் இப்போது நான். அவ்வேளையில் உல்லாசம் மட்டும்தான். மனதில் அவரவர்கள் பற்றிய  பெறுமானங்களின் கணிப்புகள் பின்னதான் உருவாகின்றன'  என்கிறார். இந்த்ப்பதில் எனக்கு திருப்தி தந்ததா என்பதை நான்  வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. நான் உரையாடல்  துண்டிப்புறாவண்ணம் தொடர்ந்தேன். என்னை  திருப்திப்படுத்துவதற்காக அவர் பதிலிறுக்கவில்லை என்பதை  உணர முடிந்தது.
சுராவுடனான இரண்டு நாட்களுக்கும் மேலான பொழுதுகள்  உரையாடல்களாய்தான் கழிந்தன. அவ்வேளைகளில் அவர்  வலியுறுத்திக் கூறும் ஒரு கருத்து என்னைக் கவர்ந்தது.  ஏற்புடையதாகவும் இருந்தது.
'தமிழில் சொந்த அபிப்பிராயம் என்பது அருகிவிட்டது. புகழ்தல்  அல்லது பட்டும்படாமல் தட்டிக் கொடுத்தல் மற்றவர்களின்  கருத்துக்குள் ஒழிந்து கொள்ளல் என்பது  நடைமுறையாகின்றது. இதனால் விவாதங்கள் எழாது, தேடல்  தாகம் அற்று, புதியது புனையும் வேட்கை தணிந்து, நீர்த்துக்  போகின்றது தமிழ்... இலக்கியப் படைப்புகள்பற்றி  ஒவ்வொருவரும் தயங்காமல் தங்கள் கருத்துக்களை  வெளியிடவேண்டும்.'
அவரது உரையாடல்களிலும் உரைகளிலும் இக்கருத்தை  தெளிவாகவே உணர முடிந்தது.  அவர் மு.வரதராசனின்  இலக்கிய வரலாற்றை உதாரணத்திற்கு குறிப்பிட்டார். அதில்  உள்ள இலக்கியக் கொள்கைகள் அனைத்தும் இரவல்  தன்மையது. ஆங்கில இலக்கிய ஆய்வாளர்களின் பகுப்பாய்வை  மேற்கோள் காட்டி நிறுவது. பல்கலைக்கழகளின் இலக்கிய  கருத்துக்கள் பெரும்பாலும் இத்தகையதே என்றார்.
மர்க்சீம் கார்க்கியின் தாய் நாவல் உலகப்புகழ் பெற்றது  சிறந்தது என்பதை நான் அறிவேன். படித்துமிருக்கிறேன். தமிழில் கூட தாய் நாவல் பலரின் மொழிபெயர்ப்புகளையும்  பதிப்புகளையும் கண்டது. அந்நாவல் தமிழில் இரண்டு இலட்சம்  பிரதிகள்வரை விற்கப்பட்டுள்ளதாய் சோவியத் இலக்கியங்களை, நூல்களை வெளியிடும் என்சிபிஎச் நிறுவனத்தில் பணியாற்றும்  ஊழியர் ஒருவர் என்னிடத்து தெரிவித்திருக்கிறார். இது 87ம்  ஆண்டிற்கு முன்னரான கூறறு. அதில் உண்மை இருக்ககூடும்.  ஏனெனில் தமிழில் வாசிப்பவர்கள் தாய் நாவலையும் தவறாது  படித்திருப்பர் என்றே நம்புகிறேன். சுரா கூறினார் 'மர்க்சிம்  கார்க்கியின் தாய் நாவல் கலை அம்சத்தில் வெற்றி பெறாதது.'  நான் அதிர்ந்து போனேன். இதனைத் தனிப்பட்ட உரையாடலின்  போதல்லாமல் பொதுக் கலந்துரையாடலின் போதே  இக்கருத்தை தெரிவித்தார். அவ்வேளையில் நான் பாரிஸ்  புறப்படும் அவசரத்தில் இருந்தேன். அவருடனான கேள்வி பதில் பகுதியில்கூட யாரும் இதுபற்றி கேள்வி எழுப்பவில்லை.  அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சொந்தக்கருத்துடன்  விவாதங்களில் உற்சாகமாக கலந்துகொள்ளும் சிவசேகரம்  உட்பட யாரும் கேள்வி கேட்கவில்லை.
தாய் நாவல் கலை அம்சத்தில் வெற்றி பெறாதது என்றால்  கலை, கலைவெற்றி, என்பது என்ன? கலை என்பதும் அவரவர்  கண்ணோட்டம் சார்ந்ததாய் இருக்குமோ?
நாங்கள் சந்தித்த முதல் நாளிரவு தூங்காமல் உரையாடல்களில் தொடர்ந்தோம். ஐரோப்பாவில் இப்படி ஒரு இரா முழிப்பு  எதிர்பாராதது. அது என் தமிழக- ஈழ இரவுகளை நினைவில்  கொணர்ந்தது. நுனிப்புல்லாய் மேயந்தவற்றின் மீதங்களை  மெல்ல முடிந்ததும், தத்துவப் புதிர்களில் சிக்கவிழ்த்ததும்,  தெரிந்தவை விரிவு பெற்றதும், சில முடிச்சுகள்  இறுகிப்போனதும் இப்படியான இராமுழிப்புகளில்தான்.  சுராவுடனான இரா முழிப்பும் இப்படி ஒன்றாய் அமைந்து  போனது சந்திப்பின் பயன்களில் ஒன்று.
இலண்டன் நவீன கலை இலக்கிய ஊக்குவிப்பு நிலையத்தை  (I.C.A) பார்வையிட்டு விட்டு திரும்புகையில்தான் அவரிடம்  அந்த கேள்வியை தொடுத்தேன் என்று நினைக்கிறேன். 'நவீன  தமிழ் இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், நாடகம்  என்பவை மேல்நாட்டாரிடம் இருந்து (அதாவது ஐரோப்பாவிடம்  இருந்து) பெறப்பட்டவை. ஆங்கிலம் வழி வந்து சேர்ந்தவை  என்கிறார்கள். அப்படியானால் தமிழில் செய்யுளின் வளர்ச்சியில் அடுத்த இலக்கிய வடிவம் என்னவாய் இருந்திருக்கும்?.  மேலையை மொழிகள் குறிப்பாக ஆங்கிலம் அல்லாத ஏனைய  மொழிகள் அனைத்தும் நவீனத்தை பிரதிபலிக்கும் வீரியத்தை  கொண்டிருக்கவில்லையா?.  தமிழில் இலக்கணப்படுத்த  கூடியதாய் நவீன இலக்கிய வடிவம் தமிழில் இன்னமும்  வளர்ச்சியுறவில்லையா?  கேள்வி இன்னும் நீளமானது. ஆனால்  இவற்றுக்கு தன்னும் பதில் கிடைக்குமானால்... நான்  எதிர்பார்த்திருந்தேன். வழமையாக கேள்விகளை உள்வாங்கி  மெதுவாக பதிலிறுப்பதை அவதானித்திருந்தேன்.  இக்கேள்விக்கும் அப்படிப் பதில் கிடைக்கும் என  எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கேள்வியின் இறுதிப்பகுதிக்கே சுரா பதிலிறுத்தார்.
'தமிழில் சிறுகதை சிகரங்களை தொட்டிருக்கின்றது. உலகத்  தரத்திலான சிறுகதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.  சிறுகதையை தமிழில் இலக்கணப்படுத்த முடியும்'. சுராவின்  குரலின் தொனி அழுத்தமாக இருந்தது. சுரா அவர்களே  சிறுகதை எழுத்தாளர்தான். சாந்தி இலக்கிய இதழில் தன் முதல் சிறுகதை வெளிவந்ததாய் கூறினார். நான் பிறப்பதற்கு முன்பே  அவர் எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் இதுவரை 50  சிறுகதைகள் வரையில்தான் எழுதியுள்ளார். அவர் கூறினார்     ' வருடத்திற்கு ஒன்றேகால் கதைவீதம் சராசரியாக  எழுதியுள்ளேன். குறைவுதான். ஆனால் திருப்தியாக  இருக்கின்றது'.
சுராவின் சிறுகதையான அக்கரைச் சீமையில் வரும் நாயுடுவும், காப்பிரிகள் தேசமான ஆபிரிக்காவும் இன்றைய  இலங்கைத் தமிழர்களின் குளிர்வலைய வாழ்வினது  மறுபதிப்பாகவே காணப்படுகின்றது. 40 வருடங்களுக்கு  முன்னான தமிழகத்தில் இருந்து காப்பிரிகள் தேசத்திற்கு  சென்றவன் பற்றிய சுராவின் கதை இன்றைக்கும் எங்களுடன்  பொருந்திப்போகின்றது. அன்றைய அந்த நாயுடு காப்பிரிப்  பெண்ணை வைத்துக் கொண்டு குழைந்தை குட்டிகளுடன்  காலம் தள்ளுகிறான்.( ஆனால் இன்றைய இலங்கைத் தமிழர்  காப்பிரிகளை கறுப்பர் என சாதிய மனோபாவத்துடன்  இகழ்வதுதான் வித்தியாசம்). எப்படியும் இந்தியாவுக்கு  போய்விடவேண்டும் எனச் சொல்லியே 25 வருட காலத்தை  ஆபிரிக்காவில் கழித்துவிடும் நாயுடுகளாகத்தான் இலங்கைத்  தமிழர் இருப்பரோ?
இராமுழிப்பு கருத்தாடலில் எனக்கு கிடைத்த புதையலாக  தமிழில் அதிகம் அறியப்படாத, ஆனால் குறிப்பிடத்தக்கவரான  ஜி. நாகராஜன் பற்றியது என்றே கூறுவேன். நிறையவே அவர்பற்றி சுரா பேசினார்.  அவர் தொடர்ச்சியாக நீண்ட நேரம் தனிப்பட்ட வகையில்  பேசியது ஜி. நாகராஜன் பற்றியதே. அதிகமான நேரங்களில் சுரா  மற்றவர்களிடமிருந்து கேட்கவே செய்தார். இது பலரிடம்  காணாத பண்பு. இதன் காரணத்தால்தான் தன் சொற்ப கால  பயணத்தில் பெற்ற அனுபவத்தை 'தாழ்ந்து பறக்கும்  தமிழ்க்கொடி' என சுபமங்களாவில் கச்சிதமாக எழுத முடிந்தது  போலும். ஈழத்து இலக்கியம் பற்றி அதிகமாகவே அறிந்து  வைத்திருக்கும் சுரா, அவை பற்றி உயர்ந்த அப்பிராயங்களை  கொண்டிருப்பதையும், சிகரங்களை தொடும் படைப்புகள்  ஈழத்தமிழரிடமிருந்தே வரும் என்ற அவரின் எதிர்பார்ப்பினையும்  சந்திப்பின் போது உணர முடிந்தது.
எது எப்படியாயினும் அவரது சிந்தனா பள்ளி முறைமைக்குள்  நான் பொருந்தக் கூடியவனாய் இராதது அவருக்கு  ஆச்சரியத்தை தராது.

செப்டம்பர்-1993

மெளனம் இதழ்:3

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


     இதுவரை:  24716406 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4123 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com