அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 23 arrow கரோல்ட்பின்ரர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கரோல்ட்பின்ரர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஜன்  
Friday, 23 December 2005

இலக்கியத்திற்கான இவ்வாண்டின் நோபல்பரிசினைப் பெற்ற பின்ரர் பற்றிய சிறிய அறிமுகம்!

Harold pinter

(Harold pinter அவர்களின் நோபல் பரிசு ஏற்புரை)

மிகுந்த கவனக்குறைவுடன் அன்றைய (13-10-2005) மாலைச் செய்தியைக் கேட்டுக்கொன்டிருந்தேன். மிகவும் ஆற்பாட்டமில்லாமல் இந்த ஆண்டுக்குரிய இலக்கியத்திற்கான நோபல்பரிசினை கரோல்ட் பின்ரர் (Harold pinter)  பெறுகிறார் என்று சொல்லப்பட்டது. அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

பொதுவாகவே ஆங்கிலேயர்களைப்போல் தமது பெருமைகளை அளவுக்கதிகமாகப் போற்றிக் கொள்பவர்கள் வேறுயாருமில்லை என்பது எனது அபிப்பிராயம். இவ்வளவு முக்கியமான விடயத்தை இவ்வளவு அடக்கமாக வாசித்ததால் கரோல்ட் பின்ரர்தான் பெற்றுக்கொன்டாராவெனச்
சந்தேகமாகவும் இருந்தது.

நோபல்பரிசு அதன் இலக்கியத்தரத்திற்கு அப்பால் ஒரு அரசியற் பின்னணியிலேயே வழங்கப்படுவதாகக் கேள்விப்பட்டதுண்டு. மிக்கேயில் சொலக்கோவ் என்ற விதிவிலக்கும் அதற்குள்தான் நிகழ்ந்திருக்கிறது.
இப்போது மேலோங்கிவரும் பலத்தினடிப்படையில் எழும் ஒருதலைப்பட்சமான ஆதிக்கக் கருத்துக்களின் பிடியை மீறி விதிவிலக்குகள் மீண்டும் நிகழாது என எண்ணி ஏமாந்துள்ளேன். ஓகான் பமூக் (orhan pamuk) முகமட் எல்பரேட் (Mohamed Elbaradei)  ஆகிய பெயர்கள் துருக்கி,அமெரிக்க அரசுகளின் நெற்றிக்கண் எரிவிற்கு ஆளாகாமல் தவிர்க்கப்பட்டிருந்தாலும் ஆங்கிலேய, அமெரிக்க அரசுகளின் புறமொதுக்கலை மீறிய பின்ரரின் தெரிவும் ஒரு விதிவிலக்குத்தான்.

ஈராக்கின்மீது யுத்தம் வேன்டாமென லண்டனில் நடந்த மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் உரையாற்றிய பின்ரரின் தோற்றத்திற்கும் இப்போது ரி.வி.யில் தோன்றிய தோற்றத்திற்குமிடையில் மிகப் பாரிய வேறுபாடு. இடையில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதையும்
அக்காலங்களில் அந்நோய்பற்றி எழுதிய கவிதைகளையும் The guardian பத்திரிகையில் பார்க்க முடிந்தது. "பரிசு கிடைத்தது பற்றி கேள்விப்பட்ட போது நான் பேச்சிழந்து போனேன்" என்றார். அது அவரது உணர்வுரீதியானது மட்டுமல்ல, உடல்ரீதியானதும்தான் எனக் கருதினேன். ஆயினும் அவர் தனது நோபல் உரையை ஆற்றவேண்டியிருக்கிறது. அதை அவர் அமெரிக்காவின் ஈராக்கியப் போரின் எதிர்ப்பிற்குரிய தளமாகப் பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். பின்ரர் தான் நினைத்தகைப் பேசக்கூடிய மனத்தைரியம் வாய்த்தவர். ஜேர்ச் புஷ்சை "மனிதகுலக் கொலைகாரன்"  என்றும் ரொணி
பிளேயரை "கிறிஸ்தவக் கைக்கூலி ரவுடி" என்றும் குறிப்பிட்டவரல்லவா?

இளமையிலேயே மிகுந்த வாசிப்புப் பழக்கமுடையவராயிருந்தார் பின்ரர். ஆர்னோல்ட் பெனற் (Arnold Bennett) ஏ.ஜே.குறோனின் (A.J.cronin)  ஆகியோர்களது நாவல்களை விரும்பிப் படிக்கும் இவரது தாயாரிடமிருந்து இப்பாதிப்பைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. புத்தகங்களை வாங்குவதற்குரிய பொருளாதார நிலை வாய்க்கப் பெறாததினால், தனது பன்னிரண்டாவது வயதில் கவிதை எழுதத்தெடங்கிய பின்ரருக்கு Hackneyயின் பொது நூல்நிலையமே பெரும் வாய்ப்பாக அமைந்தது. "வாழ்வில் ஒரு நீரூற்று" என அந் நூல்நிலையத்தைப் பின்னாளில் குறிப்பிட்டார். டோஸ்ரோவெஸ்கி, வேர்ஜினியா வுல்வ், டி.எச் லோறன்ஸ்,ரி.எஸ்.எலியட், ஏனஸ்ட் கெமிங்வே ஆகியோர்களை வாசிக்கும் பழக்கமுடைய இவருக்கு,இவரது பதினான்காவது வயதில் பெற்றேரால் வழங்கப்பட்ட புத்தகம் சேக்ஸ்பியரின் தொகுப்புக்களாகும். ஆனால் பதினைந்தாவது
வயதில் தானே வாங்கிய புத்தகம் ஜேம்ஸ் ஜொய்ஸின் 'யூலிசெஸ்'ஆகும். இது இளமையிலேயே மரபிலிருந்து நவீனத்துவதிதில் வேட்கை கொள்ளும் பின்ரரை இனம் காட்டுகிறது. ஆயினும் அவர் அந்நூலை வைத்திருப்பதற்கு பெற்றோரிடமிருந்து பலத்த எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது.
இதுபற்றிப் பின்ரர் இவ்வாறு நினைவுகூருகிறார். "அவர்கள் அந்நூலை வாசித்திருக்கவில்லை. ஆனால் அது உகந்த நூலல்ல என்றவிதமாய் அறிந்திருந்தார்கள். தந்தையோ அதை வரவேற்பறையிலுள்ள புத்தக செல்பில் இருந்து எடுத்துவிடும்படியும், தாயார் உணவுபரிமாறும் அவ்வறையில் அவ்வகை நூலை வைத்திருக்கப் போவதில்லையென்றும் கூறினார்."

பாடசாலை நாட்களில் சக மாணவர்களிடையே டோஸ்ரோவெஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்,' காவ்காவின் 'விசாரனை' ஆகிய நாவல்களைப் படித்துப் பார்க்கும்படி கூறும் பின்ரர் 'யூலிசெஸ்' நாவல் பற்றியும் அதன் ஆழ்மன உணர்வுகள் பற்றியும் பாடசாலை இதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். இக்காலத்தைப்பற்றி அவரது நன்பர் ஒருவர் "கரோல்ட் அனேக முக்கிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். காவ்கா, பெக்கற் போன்றவர்கள் முக்கியமானவர்கள்." எனக் குறிப்பிடுகிறார். இதையே பின்ரரும் "கெமிங்வே, டொஸ்ரோவெஸ்கி, ஜொய்ஸ், கென்றி மில்லர் ஆகியோரைப் படித்திருந்தாலும் பெக்கற்றும், காவ்காவுமே தன்னோடு நிரந்தரமாகத்தங்கியிருந்ததாகக்" கூறுகிறார்.

ஆங்கில நாடகத்துறையில் சாமூவேல் பெக்கற்றின் வாரிசு எனக்குறிப்பிடப்படும் பின்ரர், முதல் நாடகமான The roomல் இருந்து இருபத்தியொன்பது நாடகங்களை எழுதியுள்ளார். இவைகள் 'பின்ரரின் நாடகங்கள்' என நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. தனது நாடகங்கள் சிலவற்றில் நடித்தும், சிலவற்றை நெறிப்படுத்தியும் உள்ளார். இதுதவிர கவிதைகள், அரசியற் கட்டுரைகள் என நிறையவே எழுதியுள்ள பின்ரர் வானொலி நாடகங்கள், திரைப்படங்களுக்கு வசனம், ஆகியவைகளிலும் ஈடுபாடு காட்டியுள்ளார். ஆரம்பத்தில் சுயசரிதை வடிவிலான The dwarfs என்றொரு நாவல் எழுதியதாகவும் குறிப்பு உண்டு. ஆயினும் அது இதுவரை வெளிவரவில்லை.

இவரது இரண்டாவதும் முதல் முழுநீள நாடகமுமான The birthday party படுதோல்வி அடைந்தது. லண்டனில் ஒரு வாரங்களின் மொத்த வருமானமே 260 பவுண்டுகள் மட்டுமே. இதுபற்றிப் பின்ரர் குறிப்பிடுகையில்"அந் நாடகம் விமர்சகர்களால் படுகொலை செய்யப்பட்டது. கொத்திக் குதறப்பட்டது அது ஏனென்றே எனக்குத் தெரியவில்லை." என்றார். ஆதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் "நான் முடிந்துபோய்விடவில்லை"  எனவும் குறிப்பிட்டார். அது உண்மைதான். அடுத்து இரன்டு வருடங்களுக்குள் 'The Caretaker' மேடையேற்றப்பட்டது. அது மிகப்பெரு வெற்றியை அளித்தது. லண்டனில் ஒரு வருடங்களாக மேடையேற்றப்பட்டது. அது பின்ரரின் வாழ்க்கையையே மாற்றியமைத்தது. நிறையச் சேர்ந்த பணம் புறச்சூழலின் தடையை அகற்றி படைப்பிற்கான சுதந்தரத்தை அளித்தது. அதைத் தொடர்ந்து மேடையேற்றப்பட்ட முழுநீள நாடகங்கள், சிறு நாடகங்கள் என்பன ஆங்கில நாடகத்துறைக்கு மட்டுமல்லாது உலக நாடகத்துறைக்கே வளம் சேர்த்ததாகச்  சொல்லப்படுகிறது.

"எனது அரசியல் ஈடுபாடுகள் எனது செயற்பாட்டின் பெரும்பகுதி.அது எனது நாடகங்களில் ஊடிக் கலந்துள்ளது" எனக் கூறும் பின்ரர் அரசியல் ரீதியாக எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்கள்மீதும், அடக்குமுறை,சர்வாதிகாரம், நீதியற்ற அரசியல் அதிகாரம் என்பவைகளுக்கு எதிராகவே இயங்கியுள்ளார். கேடிஸ் (Kurdish) இன மக்களுக்குச் சார்பாகவும், சிலியின் சர்வாதிகாரி  அகஸ்ரவ் பினேசேயை மனித உரிமை மீறலுக்காக சர்வதேச நீதிமன்றதில் விசாரனை செய்யவேன்டும் என்பதற்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் ஈராக்கிய யுத்தத்திற்கு எதிராகவும் செயற்பட்டவர். கேடிஸ் இன மக்களுக்கான இவரது ஆதரவு நிலைப்பாடே 'mountain language'  'One for the road' ஆகிய நாடகங்களை எழுத வைத்தன. இவை ஆட்சியாளர்கள் தமது மொழி சாராதோரை அவமானப்படுத்துதையும் கைதிகள் சித்திரவதை பற்றியும் அதில் பாவிக்கப்படும் மொழியின் வன்மை பற்றியதுமாகும். இந்நாடகங்களுடன் சேர்ந்து 'victoria station' ஆகிய மூன்று நாடகங்களும் அதுவரை நடைமுறையிலிருந்த மரபுகளை மீறி சிறைச்சாலையுள் மேடையேற்ற அனுமதிக்கப்டவில்லை.

அமெரிக்காவின் தன்னிச்சையான அரசியற் போக்கிற்கு சலிப்பற்ற கடும் எதிர்ப்பாளர் பின்ரர். அமெரிக்கா தனக்கு ஆதரவு அளிக்க மறுக்கும் அல்லது தனது மேலாண்மையை மறுக்கும் நாடுகளில் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகள்மீது சுதந்திரம், கிறிஸ்தவ ஒழுங்குகள், மார்க்சிய,லெனி
னிய மத எதிர்ப்பு ஆகிய அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகள் மூலம் சின்னா பின்னமாக்கப்படுவதைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். உலக வங்கிப் பேராளர்களது இரவு உணவுவகைகளையும் குடிவகைகளையும் பட்டியலிட்டு ஒரு பொலிவியப் பெண்ணின் நாளாந்த அவலத்தையும் குறிப்பிட்டு அப்பேராளர்கள் மேற்கொள்ளப்போகும் பொலிவிய பொருளாதாரப் பரிந்துரைகள் பற்றிய எள்ளல் மிகவும் கனதியானதே. அதேபோல் அன்றைய செக்கோ செலவாக்கிய பொலிசார் வின்சலோஸ் சதுக்கத்தில் நடத்திய தடியடிப்பிரயோகத்தை "கடும் சர்வாதிகாரத்தனமான அரசுக்கு இயல்பாக அமைந்துள்ள கொடூரமான அடக்குமறையின் செயல் எனக்குறிப்பிடும் நாம் வெஸ்மினிஸ்ரர் பாலத்தில் மாணவர்கள், குதிரையில் காவல் புரியும் பொலிசாரினால் தாக்கப்பட்டபோது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை" என்று குறிப்பிடும் முரன்பாட்டையும் குறிப்பிடுகிறார்.1991ன் முதல் ஈராக்கிய யுத்தத்தைப்பற்றி இவர் எழுதிய American Football
என்ற கடும் வார்த்தைப் பிரயோகம் கொண்ட கவிதையைப் பிரிட்டனிலுள்ள அனைத்து முக்கிய பத்திரிகைகளும் பிரசுரிக்க மறுத்துவிட்டன. இறுதியில் socialist என்ற மிக மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகள் கொண்ட ஒரு பத்திரிகையிலேயே வெளிவந்தது. தனக்கு நேர்ந்த இத் துயர்பற்றி வெளியிடக்கூட அவர் Index on censorshipஐயே நாடவேண்டியிருந்தது.

பினரருக்குக் கிடைத்த இப்பரிசு பற்றி அவரது சக நாடகாசிரியரான ரொம் ஸ்ரொப்பாட் (Tom stoppard) கூறுகையில் "தனது படைப்புக்களை மிகச் செப்பமாகச் செய்த ஒருவருக்கு மட்டுமல்ல தன்னைத் தொடர்ந்து மேடை நாடகங்களை எழுதிய அநேக நாடக ஆசிரியர்களது பாதையை மாற்றியமைத்த ஒருவருக்கு இப்பரிசு கிடைத்துள்ளது." எனக் குறிப்பிடுகிறார். அதேவேளை கிறிஸ்ரோபர் கிற்சென்ஸ் (Christopher hitchens) குறிப்பிடுகையில் "பல தசாப்தங்களாக அரசியலுக்காக இலக்கியத்தைத் துறந்த ஒருவருக்கு இப்பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. இவரது அரசியல் மிகப் பழமையானதும் பைத்தியக்காரத்தனமான அமெரிக்க எதிர்ப்புணர்வும் கொண்டது. சீரழிந்த நோபல் பரிசு ஒழுங்கீனத்தின் ஒரு பகுதி இது". என்கின்றார்.

ஒரு படைப்பு சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் ஆரோக்கியமானதுதான்.ஆனால் ஒருவரது அரசியல் நிலைப்பாடு சார்ந்து அவரது படைப்பின் முக்கியத்துவம் மறுக்கப்படுவது ஆரோக்கியமானதல்லவே. ஆயினும் பின்ரர் தனது புதிய அலை நாடகங்கள் மூலம் பிரிட்டன் வாழ்க்கைக்கு புது உயிர் கொடுத்தவர் என்று கூறப்படுவதை மறுப்பதற்கில்லை.

நமது தமிழ் சூழலில் பல பரிசுகள் சார்புநிலையில் சில சக்கட்டைப் படைப்புகளைச் சென்றடைந்த புகழ்பூத்த வரலாறு உண்டு. நோபல்பரிசைப் பொறுத்தவரை சார்பு,சார்பின்மை சார்ந்து சிலர் தவிர்க்கப்பட்டிருந்தாலும் பெற்றுக்கொண்டவர்கள் என்னவோ தகுதியானவர்கள்தான்.
                                         
29-10-2005
                  


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 16:25
TamilNet
HASH(0x55cbc5b792e8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 16:25


புதினம்
Fri, 29 Mar 2024 16:25
















     இதுவரை:  24716881 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4133 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com