அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


13வது மனிதன்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: செபஸ்ரியான்  
Wednesday, 28 December 2005



உன் துயிலைக் கலைப்பதற்காய் என்னை மன்னித்து விடு.  நான் சொல்வதை அவர்களிடம் சென்று கூறுவதற்காய்  உன்னை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இன்று முதல் நீ  என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவனாகிறாய்.

என்னை அவர்கள் சிலுவையில் அறைந்து இருபது  நூற்றாண்டுகள் ஆகிவி்ட்டன. இரண்டாயிரம் வருடங்களாக  அவர்கள் என் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். புதிய  உடன்படிக்கையினால் மனிதர்களின்பால் கொண்ட  அடங்காத அன்பினால் அவர்களின் பாவங்களை  மீளப்பெறுவதற்காக நான் சிலுவையில் மாண்டேன். இந்த  மனிதர்களின் சுபீட்சத்திற்காய் நான் மரித்த அடுத்த நாளே  இவர்கள் என் போதனைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள்.

மேற்குலகின் வீதிகள் எங்கும் நான் அறையப்பட்ட  சிலுவையைப் பார். எனக்காக இவர்கள்  கட்டியெழுப்பியிருக்கும் உயர்ந்த வழிபாட்டிடங்களைப் பார்.  என் போதனைகளைப் பரப்புவதற்காக ஒழுங்கமைக்கப்  பட்டிருக்கும் 'பெரும்படையை' ப் போல் ஒரு படை இன்று  வரையிலும் எந்த அரசாலும் எந்தச் சக்கரவர்த்தியாலும்  உருவாக்கப்டவில்லை. அதற்காக இவர்கள் செலவிடும்  பணத்தின் தொகை பாரியது.

என்பெயரால்  எத்தனை இன அழிப்புகள் நடந்தன.  அமெரிக்க ஆதிக்குடிகள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள்.  கோடிக்கணக்கான ஆபிரிக்க பிரஜைகள:  அடிமைகளாக்கப்பட்டு வேரோடு பிடுங்கப்பட்டு அவர்களில்  பல்லாயிரக்கணக்காளோர் சித்திரவதை செய்யப்பட்டுக்  கொல்லப்பட்டடார்கள். என் போதனையின் பெயரால்  அவற்றை மதிக்க வைக்க வேண்டும் எனும் சாட்டுகளால்  கிறிஸ்தவர்கள் எனத் தமமைப் பிரகடனப்படுத்தும் இவர்கள் தங்களுக்குள் தாங்களே கொலையுண்டார்கள்.   என் உபதேச நூலை ஒரு கையிலும் வாளை மறுகையிலும் ஏந்தி  அன்பை உபதேசித்த இந்த மனிதர்களின் கொடூரம்  எல்லையற்றது.

இன்றைய உலகின் தலைவிதியை நிர்ணயிக்ககும்  பலம்கொண்டு மேற்குலகம் கிஸ்தவத்தின்  பெறுமானங்களில் நிறுவப்பட்டதாக இவர்கள்  கூறிக்கொள்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களாக  தேவாலயம் தோறும் இவர்கள் என் 'உடலை' உண்கிறார்கள். என் 'உதிரத்தை' பருகிறார்கள். இருந்துமென்ன இவர்கள்  ஆக்கிவைத்திருக்கும் உலகம் அநீதிகளால் நிரம்பி  வழிகின்றது. முகப்பை அலங்கரிக்கும் சோடனைகளாக என் போதனைகளை இவர்கள் மாற்றி விட்டார்கள்.  'ஞாயிற்றுக்கிழமைக்' கிறிஸ்தவத்தால் தம்மை  திருப்திப்படுத்திக்கொள்ளும் இவர்கள் நடைமுறையில் என்  போதனையின் கொலையாளிகள்.

அன்புதான் பலமென்று நற்செய்தி கூறினேன். இவர்களோ  ஆயுத வியாபாரிகளாகி உலகெங்கும் கொலைவெறியாட்டம் நடாத்துகிறார்கள்.

நேற்று நடந்ததை பார்த்தாயா? கிறிஸ்தவ மேற்குலகு  எவ்வாறு என் பிறப்பை கொண்டாடிற்று என்பதை  பார்த்தாயா? என் பெயரால் நேற்று நடந்தது களியாட்டம். மதுவிற்பனை ஒரேவாரத்தில் எத்தனை மில்லியன்களுக்கு  விற்பனையாகியது? உண்பண்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும்  தெவிட்டத்த தெவிட்ட ஆயத்தமாகியது. இன்று காலை  இவர்கள் குப்பைத் தொட்டிகளில் எறிந்த மீதி உணவின்  பரிமாணத்தைப் பார்த்தாயா?

நேற்றும் கூட ஆமாம் நேற்றும் கூட கிறிஸ்தவ  மேற்குலகின் டிசம்பர் மாதக் குளிர் வீதிகளில் வீடற்றோர்  அலைந்தார்கள்.

நேற்றும் கூட கிறிஸ்தவ மேற்குலகின் டிசம்பர் மாதக்  குளிர் வீதிகளில் விசா அற்றோர் பொலிசுக்கு அஞ்சி  திருடர்கள் போல் திரிந்தார்கள்.

நேற்றும் கூட கிறிஸ்தவ மேற்குலகில் வாழ் அந்நியர்கள்  நாய்களைப்போல் அவமானப்படுதத்தப் பட்டார்கள். 

நேற்றும் கூட கிறிஸ்தவ வெள்ளை மேற்குலகின் நிறவெறி திமிர்காட்டியது. 

நேற்றும் கூட கிறிஸ்தவ மேற்குலகின் நாடான பிரான்சில்  விசாவற்ற வெளிநாட்டவருக்கு இலவச மருத்துவச்  சிகிச்சை இல்லையென திட்டம் தீட்டினார்கள். 

நேற்றும் கூட கிறிஸ்தவ மேற்குலகின் ஏதுமறியாத  இளைஞர்கள் இஸ்லாமியராகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக அவமானப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். 

நேற்றும் கூட கிறிஸ்தவ மேற்குலகின் வயோதிப  மடங்களில் மனிதர்கள் தனிமையில் வாடினார்கள்.

நேற்றும் கூட கிறிஸ்தவ மேற்குலகின்...


என் போதனைகள் எல்லாம் முகப்பை அலங்கரிங்கும்  சோடனைகளாகிவிடடன் சோடனைகளின் பின்னால்  இவர்கள் உலகெங்கும் மேடையேற்றும் துன்பியற்  கொடூரங்கள் என் பெயரால் நடந்தேறுகின்றன.

பன்னிரெண்டு அப்போஸ்தலர்களிடமும் நான் கையளித்த  காரியம் தோல்வி கண்டுவிட்டது. எத்தனை தடவை நான்  சிலுவையில் மாண்டாலும் இவர்களின் பாவங்களை  என்னால் இனி மீளப்பெறமுடியாது என்பதை அறிந்தோ  என்னவோ இவர்கள் என்னை தினமும் சிலுவையில்  கொல்கிறார்கள். பார்க்குமிடமெல்லாம் சிலுவைகளை  நிறுத்தி வைத்திருக்கிறார்கள். உங்களில் சிறியவர்களுக்கு  நீங்கள் இழைப்பதை எனக்கிழைக்கிறீர்கள் என்று  இவர்களிடம் கூறிவைத்தேன். இதை உணராத இவர்கள்  தினமும் என்னை சித்திரவதை செய்கிறார்கள். எனது  தந்தையின் சாம்ராச்சியத்தில் இவர்கள் மீது கொண்ட  அடங்காத அன்பு காரணமாக நான் துன்புறுகிறேன்  சித்திரவதைப்படுகிறேன்.
உறக்கத்தில் இருப்பவனே துயிலெழு. பன்னிரெண்டு  அப்போஸ்தலர்களாலும் நான் அனுப்பிய நற்செய்தி  இன்றுமுதல் காலாவதியாகிவிட்டதென்று உலகெங்கும்  பறையறைந்து கூறு. யாருடைய பாவத்திற்காகவும் இன்று  முதல் நர்ன மரிக்க மாட்டேன் என்று கூறு. பாவிகளுக்கான சம்பளம் மரணம் என்ற மீண்டும் மீண்டும் கூறு.

அநீதி நிரம்பி வழியும் நகரங்கள் எல்லாம் நரகங்களாகும்.  நாள்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அன்பின் பெயரால் அநியாயங்களைப் பூமியெங்கும் விதைப்பவர்கள் என்  ஆலயங்களுக்குள் பிசாசுக்குப் பலிபூசை செய்பவர்கள்.  இவர்களுக்காக தண்டனைக்காலம் நெருங்கிக்  கொண்டிருக்கின்றது. என் தந்தை இவர்களுக்காக  சிருஷ்டித்த காற்று மண்டலம் அசுத்தப்படுத்தபட்டு விட்டது. அறிவையும் சிந்திக்கும் சுதந்திரத்தையும் என் தந்தை  இவர்களுக்காப் பரிசாக வழங்கியும் நன்றி கெட்ட  இம்மனிதர்கள் அவறறை அணுகுண்டுகளை உருவாக்கவும் கொடிய ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவும்  பயன்படுத்தினார்கள். பணத்திற்காகப் பணம் தேடும்  இவர்களின் முடிவு காலம் நெருங்கிவிட்டது.
உறக்க்தில் இருப்பவனே துயிலெழு. பன்னிரெண்டு  அப்போஸ்தலர்களாலும் நான் அனுப்பிய நற்செய்தி  இன்றுமுதல் காலாவதியாகிவிட்டதென்று உலகெங்கும்  பறையறைந்து கூறு. யாருடைய பாவத்திற்காகவும் இன்று  முதல் நர்ன மரிக்க மாட்டேன் என்று கூறு. பாவிகளுக்கான சம்பளம் மரணம் என்ற மீண்டும் மீண்டும் கூறு.

என் போதனைகளை சோடனைகளாக எண்ணாது என்  தந்தையின் சொத்தான இவ்வுலகத்தை மாசுபடுத்தாது  இன்னமும் இருக்கும் மனிதர்களையும் ஏழைகளையும்  உணவிற்கா உடலை விற்பவர்களையும் நோயுபாதையில்  அல்லலுறுபவர்களையும் தனிமையில் வாடுபவர்களையும்  சிறியவர்களையம் பரிசுத்தமானவர்களையும் அணுகி  அவர்களிடம் பின்வருவனவற்றைக் கூறு.

என்பெயரால் எனக்காக இவ்வுலகில் நீதியை  நிலைநிறுத்துவதற்காகய் என் கட்டளையின் பேரில்  இப்போதிருந்தே இறப்பவர்கள் பாக்கியவான்கள். பரலோக  இராச்சியத்தின் கதவுகள் அவர்களுக்காய் எந்நேரமும்  திறந்திருக்கின்றது. அவர்கள்  சிலவேளைகளில் அநீதி  நிறைந்த இப்பூமியில் பயங்கரவாதிகள் என  அழைக்கப்டலாம். ஆனால் என் போதனைகள் மதிக்கப்படும்  வரை அவர்கள் போராட வேண்டும். எனது தந்தையின்  சீற்றம் இங்கு இனிப் பயங்கரங்களாகப்  பரிணமிக்கபோகிறது. இதற்காக என் தந்தையின்  கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள் பாக்கியவான்கள்.

பதின்மூன்றாவது மனிதனே துயிலெழு. சீற்றம் கொண்ட  என் கொடும் செய்தியை உலகெங்கும் பறையறைந்து  சொல்.

தூக்கம் கலைந்து கட்டிலில் நிமிர்ந்திருந்து நெற்றியை  தொட்டேன் உடலெங்கும் வியர்த்திருந்தது.

25-12-2003
நன்றி: அலையோசை

 

 


     இதுவரை:  24714205 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4402 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com