அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மூன்று கவிதைகள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேம்படிச்சித்தன்  
Wednesday, 28 March 2007

1.

வானத்தைப் பார்த்தே
ஊளையிட்ட விசர் நாயிறந்து
மண்ணகழ்ந்து புதைத்து
வருடங்கள் எத்தனையோ
ஓடிச்சென்று விட்டன.

ஊளையொலியுடன் மூளைக்குள்
புகுந்து முகாமிட்ட விசர் நாய் 
இப்போதும் வானத்தைப் பார்த்து
ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறது.

சலிப்பற்று
இடையீடு செய்துகொண்டேயிருக்கும்
வெறிநாய்களை வெட்டிப்புதைக்கும்
பிரயத்தனத்தில்

வாழ்க்கைக்கு வியர்த்தொழுகும்போதும்

வானத்திலிருந்து
ஒரு எதிரொலியைக்கூட
எதிர்பாராது விசர்நாய் மட்டும்
ஊளையிட்டுக்கொண்டேயிருக்கிறது.

 

2.

நிச்சயமாக
தண்டவாளங்கள்
இருளில்
போடப்படவில்லை.

திசைத் தீர்மானம்
திட்டவகுப்பு
நிர்மாணம்
அனைத்தும்
வெளிச்சத்தில்
நடந்தேறியவை.

தொடரூந்தோட்டுபவனுக்கும்
பயணிப்பவனுக்கும் வெளிச்சம்
தேவையில்லையென்றால்

தடம்புரண்டு போகட்டும்
பயணங்கள்.
 

3.


இல்லை
நான் சோம்பேறியில்லை.
என்னைச் செயற்திறனற்றவன்
எனக் கூறாதீர்கள்.

நான் ஆற்றிமுடிக்கவிருக்கும்
அற்புதச் சாதனைகளையெண்ணிச்
சற்றுப் பெருமிதம் கொள்ளும்
வேளைகளில் எனக்குத்
தூக்கம் வருகிறது.

ஆற்றலற்றோன் என
என்னை நிந்திக்காதீர்கள்

ஆற்றவேண்டுமெனும்
அடங்கா ஆவல் கிளரும்வேளையிலேயே
ஆற்றிமுடித்தது போல் ஆசுவாசமும்
தோன்றிவிடுகிறது.

அவ்வளவுதான்.


     இதுவரை:  24799809 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3618 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com