அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கவிஞர் எஸ்.போசுக்கு அஞ்சலி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தளநெறியாளர்  
Friday, 27 April 2007

சந்திரபோஸ் சுதாகர்கடந்த 16ம் திகதி இரவு (16-04-2007) எஸ்போஸ் எனப்படும்  சந்திரபோஸ் சுதாகர் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால்  வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.  இவர் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும்,  விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக  வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார்.
ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி,  சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி  ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன.
வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு,  வீரகேசரி ஆகிய இதழ்களிலும்  பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.
நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து  வெளியிட்டார்.
லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழிற்கு  ஆசிரியராக இருந்து கொழும்பில் வைத்து தயாரித்து வழங்கினார்.
சந்திரபோஸ் சுதாகர் என்ற தன்னுடைய பெயரிலேயே ஆரம்பத்தில் எழுதிவந்தவர் பின்னாளில், எஸ்போஸ், போஸ்நிஹாலே என்ற  பெயர்களிலும் எழுதினார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரபோஸ் சுதாகர் பளையில் 1975 இல் பிறந்தார். பிறகு வன்னியில் அக்கராயன்குளத்தில்  படித்தார். தந்தை பளை முகமாலையைச் சேர்ந்தவர். தாய்  நெடுந்தீவில் பிறந்தவர். தாய் அக்கராயன் பொது மருத்துவ  மனையில் தாதியாகப் பணியாற்றியபடியால் அங்கேயே  குடும்பத்தினர் குடியேறியிருந்தனர். -கருணாகரன்

அவரது à®‡à®°à®£à¯à®Ÿà¯ கவிதைகள்: 

01.

விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக் குறிப்பு
 
நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
உனது தோள்களில்
தோட்டாக் கோர்வைகளும் பதவிப் பட்டிகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன
கண்மூடித்தனமாய்
உன்னை நான் எப்படி வர்ணிப்பது
என்னிலிருந்து அஞ்சித் தெறிக்கின்றன சொற்கள்
மழிக்கப்பட்ட உனது முகத்தில்
ஈ கூட உட்கார அஞ்சுகிறது
உனது வரவைக் குறித்து
யாரும் மதுக்கிண்ணங்களை உயர்த்தவில்லையாயினும்
துப்பாக்கியை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறாய்
நீயே உனது வெற்றியைச் சொல்லியபடி
 
 
இருண்ட காலத்தின் இதே குரலில் பாடிய
துரதிர்ஷ்டம் மிக்க பாடல்களனைத்தையும்
மணல் மூடிற்று… நேற்றிரவு அதன் கோரைப் புற்களின் மிகச் சிறிய
முளைகளை நான் கண்டேன்
நெஞ்சில் மிதித்தபடியாய் பீரங்கி வண்டிகள் நகர்கின்றன
கிராமங்களையும் சிதைத்தழிக்கப்பட்ட
பழைய நகரங்களையும் நோக்கி
எனது விரல்கள், எப்போதும் நடுக்கமுறாத எனது விரல்கள்
உனது விழியில் நடுங்குகின்றன
நீயோ சொற்களாலும் துப்பாக்கியாலும்
எனது மனிதர்களின் நெஞ்சுக் கூட்டில் ஓங்கி அடிக்கிறாய்
என்னிடமோ
உனது நெஞ்சு வெடித்துச் சிதறம்படியாய்
அடித்துச் சாய்ப்பதற்கு எதுவுமேயில்லை
எனினும்
துடிக்கும் எனது கைகளால் ஓங்கியொரு அறை விடவே விரும்புறேன்
உனது கன்னத்தில்
விலங்கிடப்பட்ட எனது கணத்தில், நீ துப்பாக்கி இழுத்துக் கொண்டு
நடந்து வருகிறாய்
 
யாரோ சொன்னார்கள்
அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கியெறி
பதவிகளால் தொங்கிக் கொண்டிருக்கும்
சீருடையைக் கிழித்து வீசு
ஒரு தந்தையாய், குழந்தையின் நிலவு நாளொன்றின் தயார்ப்படுத்தலுக்காக
உழைக்கவும்
தாய் தந்தையரின் எதிர்பார்ப்பிற்காக துயருறவும் கூடிய மிகச் சாதாரணமான மனிதனாய்
உன்னைப் போலவே மாற்று அவனை
அல்லது நானுனக்குச் சொல்கிறேன்
அவனது துப்பாக்கி உன்னை நோக்கியிருக்காத தருணத்தில்
அந்தச் சனியனை
கணத்தில், அவன் எதிர்பார்க்காத கணத்தில்
அவனை நோக்கித் திருப்பு
உனக்கு முன்னரே அவனது குடலிற் புதையும் அவனது உயிர்
நீ அஞ்சாதே
உன்னை அவர்கள் கொல்வார்கள்
நிச்சயமாக நீயே அதை உணர்வாய்
அப்பரிசு
நிச்சயமற்ற உனது காலத்தில்
எப்போதாவது உனக்குக் கிடைக்கத்தான் போகிறது
வசத்தால், நீ தந்தையென்பதை அவர்கள் மறுத்ததைப்போலவே
நீ ஒரு பெண்ணை நேசிக்கிறாய் என்பதையும், அவள் உனக்காகவே
வாழ்கிறாள் என்பதையும்
அவர்கள் மறுத்ததைப் போலவே
உனது தாயின் கண்ணீரை, அவர்கள் துப்பாக்கியின் நெருப்பில்
காய்ச்சியதைப் போலவே
நீயும் அவனிலிருந்து எல்லாவற்றையும் மறு, சாகும் தருணத்தில்
நான் நினைக்கிறேன்
இந்த யுகத்தின், சிறையில் இருப்பதும்
செத்துப் போவதும் ஒன்றுதான்
உழுத வயல்களே
முளைக்கப் போடப்படாத தானியங்களே
வாழ்வளித்த பன்னெடுங் காலத்தின் நிழலே
சொல்
துப்பாக்கியின் செதுக்கப்பட்ட சிற்பங்களை
உன்னில் நட்டு வைத்தது யார்?
நட்டு வைத்தது யார்?
ஆவர்களை நோக்கி
விரல்களை நீட்டவில்லை எங்களில் யாருமே
மூடிக்கட்டிய பச்சை வண்டிகளில்
யாரையும் விலங்கிட்டுச் செல்லவில்லை துப்பாக்கியின் முனை மழுங்க
எங்களின் குதிரைகளைக் கொன்று
அவர்களின் தேவதைகளைக் கடத்திவரப் போனதேயில்லை எப்போதும்
 
அவர்களோ சிலுவைகளையும் முள் முடிகளையும் எறிந்தார்கள்
நாங்கள் எழுதிய கவிதைகளில் தீப்பந்தங்களைச் செருகினார்கள்
எமது விழிகள் வரைந்த ஓவியங்களோ
இரவின் காட்சிகளாய் ஒளிமங்கிப் போயின
அவர்கள் தமது குதிரைகளோடு
எமது தேர்ப்பாதைகளெங்கும்
வெறிபிடித்தலைந்தார்கள்
கிளம்பிப் படர்ந்த புழுதியில் நேற்றைய எமது ஒளியை
நாங்கள் இழந்தோம்
 
தெருவின் இருளை இடறும் குடிகாரப் பெண்ணொருத்தியின்
பேச்சில் கிறங்கி
இன்னொரு கூட்டம்
இதே தெருவில் துணியவிழக் கிடக்கிறது
வெட்கித் தலைகுனியும் நீ
போய்விடு
புழுதியில் செத்த ஒளியின் சிறகுகளைத் தேடியாவது
நீ போய்விடு
 
போஸ் நிஹாலே.
18.11.1999
 
 
02.
 
சித்திரவதைக்குப் பின்னான வாக்குமூலம்
 
உன்னை அவர்கள் கைது செய்து
எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்
எனது குழந்தைக்குப் பிடித்தமான
உனது 'சேட் கொலரின்' மடமடப்புச் சத்தம்
இன்னும் அவனது விரலிடுக்குகளில்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
அவர்கள் வாகனங்களோடு
நட்சத்திரங்களோ, ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்
சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்
கொண்டு வந்திருந்தார்கள்
அது
இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்
எனது குழந்தையின் கண்களில்
எங்களுடனேயே தங்கியிருக்கிறது
அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்
நீண்ட கூரிய ஆயுதங்களால் தாக்கவும்
கொல்லவுங் கூட முடியும்
அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை
அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்
சப்பாத்துக்களில் ப+சப்பட்ட குருதியும்
நிரூபித்து விட்டது…
நிரூபித்து விட்டது…
நம்பிக்கை கொள்
நீ பேசாதிருக்கும் வரை
உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே
சிறைக் கம்பியிடுக்குகளின் வழி
ரோஜாப் ப+க்களின் வாசனையும்
வுண்ணத்துப் ப+ச்சிகளின் சிறகுகளும்
உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்
நம்பிக்கை கொள்
நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள்
நிரந்தரமாகவே.

போஸ்நிஹாலே

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  24779000 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2953 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com