அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பொன்.காந்தன் கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பொன்.காந்தன்  
Wednesday, 16 May 2007

01.

இன்றைக்கும் நாளைக்குமாக
 
இது எமது கடைசிப் போசனமாக இருக்கலாம்
இதை எப்படி உண்ணவேண்டும் என்பதற்கு
எங்கள் ஒவ்வொருவருக்கும்
இதுவரை இல்லாத சிந்தனை தேவையாய் இருக்கிறது.
முன்னைய பொழுதுகளில் இதுவும்
பற்றாக்குறையான
புரட்சிக்காரர்களுக்குரிய பழஞ்சோறுதான்
ஆனாலும்
இதை பிசைகிற விரல்கள் ஒவ்வொன்றும்
பேனாக்களாக இருக்கவேண்டியது
நமது வாழ்வின்
இறுதிப்பெரும் உச்சரிப்பாக இருக்கும்.
கவளம் ஒவ்வொன்றுக்காகவும்
உதடுகளைத் திறக்கிறபோது
முகங்களை முகங்கள் பார்க்காமல்
இருந்துவிடப்போவதில்லை
நாம் எத்தனை சவால்களை
ஆட்டிவைத்தவர்கள்.
ஆனால்
இக்கணங்களை ஏனோ
எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை.
பிரிவின் வரவேற்பறையில் இருந்துதான்
நாம் உணவருந்துகிறோம்
இங்கேதான்
வாழ்வின் மிக ஆனந்தமான கணங்களை
உருவாக்க முடியும்.
இக்கணத்தில் வருகின்ற சிரிப்புக்கும்
வராத அழுகைக்கும்
சவால் நிறைந்த மனிதர்களாகிய நாம்
சவால் விடாதிருப்போமாக.
ஆனால்
எமது பிணம்கூட
பூமிக்கு சவால் நிறைந்ததாக
நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கவேண்டும்.
எமை எரிக்கும் தீ கூட
தோற்றபடி எரியவேண்டுமென்று
நினைக்கும் பக்குவம் உடையவர் நாமெனில்
இந்தக்கடைசிப் போசனம்
எவ்வளவு இனிப்பானதாக இருக்கும்.
நண்பர்களே நண்பிகளே
இந்தப்பொழுதுகளில் எமது உறுப்புகள் எல்லாமே
வார்த்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை. 

02.

 
நமது கடன்
 
வீட்டில் வளர்த்த நாய்க்குட்டி
ஆடு செத்ததற்காய்
விம்மி அழுதிருக்கிறேன்.
மாட்டினை கையாலும்
பூனையின் மேனியை காலாலும்
வருடிவிட்டிருக்கிறேன் சிறுவயதில்.
இப்போது நான் ஒரு குழந்தைக்குத் தந்தை.
இப்போது
நாய்க்குட்டிக்காக
ஆட்டுக்காக அழுவதில்லை
ஆனால்
நிச்சயமாக
அவைக்காக அழுது
கல்லறை கட்டி கும்பிட்டிருப்பேன்
என் காலடியில்
என் ஒவ்வொரு வயதில்
என் மனிதர்களின் மரணங்கள் மலியாதுவிட்டிருந்தால்.
 
இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக்கணக்குத் தான் தேவையாய் இருந்தது.
 
எனத மனிதர்கள்
நான்
எவ்வளவு மாறிவிட்டோம்
பெருமிதப்படுகின்றேன்.
முடியும்
இந்த மரத்துப்போன எங்கள் மனசால்
எமது உரிமைகளை
மிக விரைவில் யாரிடம் இருந்து
பெற்றுக்கொள்ள முடியும்.
அரசால் எங்கள் மனிதர்களின் மரணங்கள் மலிய மலிய
மரத்துப்போன எங்கள் மனசால்
முடியும்
நாம் நினைக்கின்ற எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
 
சிலவேளைகளில்
அரசின் குண்டுவீச்சில்
மாடுகளும் ஆடுகளும்
நாய்;களும்
சிதறிச்செத்தன.
சொல்லிச் சிரித்தார்கள் எம் மனிதர்கள்
நானும் தான்.
முடியும்
எல்லாம் முடியும்
மரத்துப்போன இந்த மனசால்.
எமக்கான எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எல்லாம்
எங்கள் குழந்தைகளின் கண்ணில் படாதபடி.
 
றோசாப்பு ஏன் சிவப்பாக இருக்கிறது என்ற
என் குழந்தையின்
வாழ்வின் முதல் கேள்வியில்
என்னுள் ஆயிரமாயிரம் முட்கள் தைத்தன.
எங்கள் குழந்தைகளின் கண்களை
பலமுறை பொத்தவேண்டியவர்களாய் இருக்கிறோம்.
சிலவேளை
எங்கள் முகங்களையும் பார்க்காதபடி
ஆனாலும்
எங்கள் முகங்கள் எங்களுக்கு மட்டுமே.
நியாயமாக இருக்கட்டும்
இந்த முகத்தை வைத்துக்கொண்டு
முடியும்
இழந்த எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எங்கள் குழந்தையின் கண்ணில்
நாய்க்குட்டிக்காகவும்
ஆட்டுக்காகவும் கண்ணீரையும்
மாட்டின் மீதான பூனையின் மீதான வருடலையும்
கொண்டுவர முடியும்.
இல்லையெனில்
நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின்
மாபெரும் அழுகை இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும். 
 
 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24783859 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5186 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com