அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 5 of 8

கானா பிரபா: ஈழத்திலும் சரி, நீங்கள் புலம்பெயர்ந்து வந்த பின்னரும்  சரி நீங்கள் மேற்கொண்ட நாடகமுயற்சிகளுக்கு உங்களோடு கூட  வந்தவர்கள் உங்களுடைய எண்ணத்திற்கு செயல் வடிவம்  கொடுக்கக்கூடியவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் இல்லையா?

தாசீசியஸ்:  ஓம் அப்படி நீங்கள் என்னோடு கூடிவந்தவர்கள் என்று  குறிப்பிட்டால் நான் முதலில் எனக்கு இந்த நாடகங்களைப் பார்க்க,  கற்றுத்தந்த அண்ணாவிமார்கள் நாடக நடிகர்கள் இவர்கள்  எல்லாரையும் குறிப்பிடவேண்டும். இன்னும் குறிப்பாக நாடக  நெறியாட்சி என்று வந்தால் உமையார் கவி என்று இருந்தார் அவர்  இறந்து விட்டார். வளமிக்க கலைஞர். அதன் பின்னர் நா.சுந்தரலிங்கம் இருந்தார். மௌனகுரு இருக்கிறார்; இப்பொழுது அவுஸ்திரேலியாவில் இருக்கும் இளையபத்மநாதன், நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல  சிவபாலன் இப்படிப் பலர் வேறு வேறு தொழில்நுட்பங்களோடு  உதவினார்கள். இனி இங்க வந்த பிற்பாடு அன்ரன் பொன்ராஜா.  இந்தியாவில்கூட எனக்கு தங்களுடைய எழுத்தால் தங்களுடைய  முயற்சியால் வழிகாட்டிய பேராசிரியர் ராமானுஐன், நா.முத்துசாமி  இன்னும் அந்த குழந்தை நாடகக் கலைஞன் ஆழிப் பட்டறை  வேலுசரவணன். இவர்கள் எல்லாம் என்னை ஆகர்சித்தவர்கள்.  இவர்கள் எல்லாம் எனக்கு தமிழ் நாடகத்துறையில் இருந்து  வழிகாட்டியவர்கள். இனி பேராசிரியர் வித்தியானந்தன்.

கானா பிரபா: இதே வேளை புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழர்கள்  வாழக்கூடிய நாடுகளிலே நாடகப் பயிற்சிப் பட்டறைகளை  வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில்கூட உங்களுடைய நாடகப்  பயிற்சிப் பட்டறையை வழங்கியிருக்கிறீர்கள். சமகாலத்தில்  முத்துச்சாமி போன்றவர்களால் வீதி நாடகங்களை மக்கள் மத்தியில்  அறிமுகப்படுத்தும் செயல் திட்டத்தை பரவாலாக  மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் உங்களுடைய நாடகப் பயிற்சிப் பட்டறையும் உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டனவா?  அவற்றுக்கான அங்கிகாரம் எவ்வாறு இருந்தது.?

தாசீசியஸ்: நீங்கள் பயிற்சிப் பட்டறை என்று குறிப்பிடுகிற நேரம்  முத்துசாமி என்று குறிப்பிட்டிருந்தீர்கள் அவர் வீதிநாடகங்களை  அல்ல தெருக்கூத்து முயற்சிகளையே மேற்கொள்கிறார்.  வீதிநாடகங்களில் இருந்து அது கொஞ்சம் வித்தியாசம். பிரளயன்தான் நிறைய வீதிநாடகங்களை அங்கே செய்துகொண்டிருக்கிறார். நான்  பார்த்த நாடகங்களில் மற்றவர்களும் இருக்கிறார்கள். இவருடைய  நாலு அல்லது ஐந்து நாடகங்களை நான் நேரிலே போய்ப் பார்த்தேன்.  நா.முத்துச்சாமி செய்த பங்களிப்பு ஒரு மிகப் பெரிய பங்களிப்பு. நான் அவரை ஒரு யோகியாக, ஒரு ஞானியாக, ஒரு தவம்  இயற்றுகிறவராகத் தான்  பார்க்கின்றேன். அவர் கூத்துப்பட்டறையைத் தொடக்கியபோது மற்றவர்களிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி  இதற்கென தன்னை அர்ப்பணித்தார். அவர் ஒரு வளமான நாடக  எழுத்தாளர். சிறுகதை எழுத்தாளர் கட்டுரை எழுத்தாளர்,  சிந்தனையாளர். ஆனால் கூத்துப்பட்டறைக்கு என்று தன்னை  அர்ப்பணித்த தொண்டு பெரிய விருட்சமாக வளர்ந்துவிட்டது. அவர்  என்னைக் கவர்ந்துகொண்ட ஒரு மனிதர். நான் நேராக அவர்களுடைய தயாரிப்புகளை பார்க்க முடியாமல் போனாலும் எழுத்துக்களால்  அவரிடமிருந்து நிறைய விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். இனி பேராசிரியர் ராமனுஐம் தமிழ்நாடு இழந்த கேரளம் பயன்பெற்ற ஒரு  தமிழ்ச் சொத்து, நாடகச் சொத்து. அவர்களுடைய எழுத்துக்கள்  எல்லாம் என்னைக் கவர்ந்தன.
பயிற்சிப் பட்டறைகளைப் பொறுத்தவரையில் நான் 'ஸ்ரனிஸ்  லாவ்ஸ்க்கி" ஆளுமையால் கவரப்பட்டவன். அதாவது ஒரு கருவை  உள்வாங்கிப் பிறகு உமிழ்வதாக கொடுப்பதென்றால் நடிகன் தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும். அப்படி நடிகனைத் தயாரிக்கும் ஒரு  பாங்கில் என்னுடைய பயிற்சி நெறிகளை நான் வழங்கினேன்.  அவைகளை நான் முழுக்க முழுக்க மேற்குலகநாடுகளில் இருந்து  பெற்றுக்கொள்ளவில்லை. நிறைய நிறைய எங்களுடைய நாடுகளில்,  எங்களுடைய அண்ணாவிமாரிடம் சித்தவைத்தியர்களிடம் இருந்து  நான் கற்றவைகள் நிறைய. குறிப்பாக 'ஈரப் பெரியகுளம்"  வவுனியாவில் ஒரு புறத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் ஒரு  முறிவு - தெறிவு வைத்தியரை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அங்கே அந்த முறிவு - தெறிவு வைத்தியர் கண்டியரசனுடைய  மருத்துவராக இருந்தவர். நான் வவுனியாவில் ஒரு தடவை குன்றின்  மேல் நின்று என்னுடைய பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கும்  காலைவேளையில் அவரும் அங்கு மூலிகைகளை பறிப்பதற்காக  வந்திருந்தார். என்னுடைய பயிற்சிகளைப் பார்த்துவிட்டு என்னோடு  உரையாடினார். அப்பொழுது நான் தனிமையைத் தேடி அந்தப்  பயிற்சிகளை செய்கிறபோது, சில பயிற்சிகளைக் கற்றுத் தந்தார். அது முழுக்க முழுக்க தமிழ் வடிவங்களே என்று ஓலைக்கற்றைகளைக்  கூடக் காட்டினார். இவைகள் எல்லாம் ஒருவனைக் கட்டுப்படுத்தி  அதே நேரம் ஒரு சின்ன இடத்துக்குள் இருந்து கொண்டு எப்படி  தன்னையொரு பெரிய ஆளாக காட்டுவதற்கு, ஒரு சிறிய புள்ளி ஒரு  பெரிய பிரமிப்பாக காட்டுவதற்கு, தனிய நிக்கிற ஒரு நடிகன் மேடை  முழுவதையும், அரங்கம் முழுவதையும் நிறைக்கக்கூடிய வகையில்  எவ்வாறு செய்துகொள்ளலாம் என்பதையெல்லாம் அவர் எனக்குக்  காட்டினார். அதே போல மன்னாரில் நறுவிலிக் குளம் என்ற இடத்தில் 'மொத்தம் போல்' என்ற ஒரு ஆசிரியர், வைத்தியர் அவர் எனக்கு  கற்றுத் தந்தவைகளும் நிறைய. அந்ந சித்த மருத்துவர்களும் எனக்கு  நிறையக் கற்றுத் தந்தவர்கள் தான். அப்பிடி மட்டக்களப்பிலும்  நிறைய மருத்துவர்களையும் அண்ணாவிமார்களையும் சந்தித்தேன்.  அவர்களிடம் கற்றதெல்லாம் நிறைய இவைகள் எல்லாவற்றையும்  சேர்த்து திரட்டி ஒரு பயிற்சி நெறியை நான் உருவாக்கியிருந்தேன்.  ஆனபடியால்தான் நானும் தம்மயாகொட இவரும் இணைந்து  இலங்கையின் பல பாகங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை  நடத்தியிருந்தோம். தமிழ்ப் பகுதிகளிலல்ல சிங்களப் பகுதிகளில்.  நாங்கள் தமிழ்ப்பகுதிகளில் அந்தகாலத்தில் அந்தப் பயிற்சிகளை  காட்டியபோது எங்களை அவர்கள் வேடிக்கையாகப் பார்த்தார்களே  ஒழிய, யாரும் வரவேற்றதாகத் தெரியவில்லை. ஆனால் சிங்களக்  கலைஞர்கள் அப்படியல்ல. நாங்கள் போகாத சிங்கள ஆங்கிலக்  கல்லூரிகள் இல்லையென்றே சொல்லலாம். நாங்கள் பயிற்சி  கொடுப்பதற்காக, நாங்கள் மூச்சுப் பயிற்சி, நடிப்புப் பயிற்சி இப்படி  பலவிதமான பயிற்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.  இவற்றுக்கெல்லாம் நான் நன்றியாக இருப்பது ஏர்னஸ்ற் மக்கின்  ரைர், ஐராங்கனி சேரசிங்க போன்ற பெரும் கலைஞர்களுக்கு. அவர்கள் தாங்கள் மேற்கு நாடுகளில் கற்றதை எங்களுக்கு கற்றுத்தர, அதை  நன்றாகக் கற்றுவிட்டு எங்களுடைய கிராமம் கிராமமாகச் சென்று  நான் தமிழ் சித்த வைத்தியர்களிடம் கற்றதையும் கலந்து  செய்ததையே இங்கே நான் மேற்குநாடுகளுக்கு  கொண்டுவரக்கூடியதாக இருந்தது. நான் கொண்டு வந்தவற்றை  மேற்கு நாடுகளின் சாயலே இல்லாமல் எங்களுடைய சாயலாக  அதை இங்குள்ளவர்கள் கண்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு  விளக்கம் கொடுக்கும் போது, ஒவ்வொரு செயலுக்கும் பயிற்சிக்கும்  விளக்கம் கொடுக்கும்போது நான் என்னுடைய சித்த வைத்தியர்கள்  எனக்குக் கற்றுத் தந்த அந்த வழிமுறைகளைத்தான்; தெளிவாக,  உறுதியாக என்னால் கொடுக்க முடிந்தது. ஆகவே அந்த  பயிற்சிகளோடு நான் இங்கே வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லவும்  மட்டுமல்ல, பயிற்சி கொடுக்க மட்டுமல்ல நான்  ஊதியம்  பெறவும்கூட எனக்கு முடிந்தது.



     இதுவரை:  24782757 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5935 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com